கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்த நாடுகளில் முக்கியமானது இலங்கை. இலங்கையைப் பொறுத்தவரை அந்நாடு முழுக்க முழுக்க சுற்றுலா துறையையே நம்பியிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் பல்வேறு துறைகளுக்கான செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தக் கொரோனாவால் இலங்கை சுற்றுலா துறை படுத்துக்கொண்டது. இன்னமும் மீண்டெழவில்லை.
இதைக் காட்டிலும் அந்நிய செலாவணியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை உழன்று வருகிறது. இச்சூழலில் இலங்கை அரசு இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரத்து 751 கோடி ரூபாய். இந்தக் கடனை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காகக் கேட்டிருக்கிறது. இலங்கை அரசுக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம் தான் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது.
இந்தக் கழகம் அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் மக்கள் வங்கி (people's bank) ஆகிய இரண்டிற்கும் கொடுக்க வேண்டிய பாக்கி மட்டும் 3.3 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 47 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடனை அடைக்காவிட்டால் மேற்கொண்டு பணம் தர முடியாது என வங்கிகள் சொல்வதால் கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியாவை நாடியுள்ளது இலங்கை அரசு. உலகளவில் ஊரடங்கு குறைந்து வருவதால் போக்குவரத்து அதிகமாகியிருப்பதால், கச்சா எண்ணெய் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது இலங்கையின் நிலைக்கு மற்றொரு காரணம்.