தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜெய்-யோங் உள்ளார். சாம்சங் குழுமத்தின் 3-ஆம் தலைமுறை தலைவரான லீ, அவரது தந்தை லீ குன்-ஹீ மரணத்துக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை -வின் கூட்டாளியான சோய் சூன்-சில் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஜெய்-யோங் 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெய்-யோங்க்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
இந்த தீர்ப்பு இப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், சாம்சுங் நிறுவனம் அதன் உச்சபட்ச முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது.