ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித்ததால் அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற பேச்சு நிலவியது. ஆனால் அந்த வாய்ப்பு அமையவில்லை என்றதும், ரோஜாவுக்கு முக்கிய பதவி வழங்கவேண்டும் என்ற பேச்சு எழுந்தது.
இதையடுத்து, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி ரோஜாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் இருந்து ரோஜா நீக்கப்பட்டு புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ரோஜா மீது குவிந்த புகார்கள்தான் இதற்கு காரணம் என்கிறது கட்சி தலைமை. புத்தூர், நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலர் களம் இறங்கியிருக்கிறார்கள். ரோஜாவின் நடவடிக்கைகளினால்தான் வேட்பாளருக்கு எதிராக பலர் இறங்கியிருக்கிறார்கள் என்று புகார்கள் குவிந்ததால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
